Tuesday, May 24, 2011

மக்களை அழித்த கருணா சுகபோகம், புலிகளை ஒழித்த நான் சிறையில் - பொன்சேக்க

Best Blogger Tips
நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச்சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய கருணா அம்மான் நீதிமன்றில் நிறுத்தப்படாமல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுப் புலிகளை ஒழித்த நான் சிறைத் தண்டனை அனுபவிக்கின்றேன் என்று மேல்நீதி மன்றில் பச்சாதாபப்பட்டார் இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா.     

வெள்ளைக்கொடி விவகார வழக்கு மேல்நீதிமன்றில் நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முற்பகல் 11.20 மணிக்கு நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒருநிமிடத்துக்குள் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. இதனை அடுத்து நீதிமன்றக் கதவுகளைத் திறக்கும் படி நீதியரசர் தீபாலி விஜேசுந்தர அதிகாரிகளைப் பணித்தார். அத்துடன், சட்சியமளிக்க முடியுமா என்றும் சரத் பொன்சேகாவிடம் கேட்டார். அதற்கு அவர் போதியளவான வெளிச்சம் இல்லாதமையால் சாட்சியப் பதிவாளர் தவறுகளை இழைக்கலாம் என்று கூறினார்.
  
இதனைக் கவனத்தில் கொண்ட நீதியரசர் தீபாலி விஜேசுந்தர முன்னால் வந்து சாட்சியம் அளிக்கும்படி சரத் பொன்சேகாவிடம் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சரத் பொன்சேகா முன்னால் வந்து சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனது சொந்தங்களைக் கூடப் புறக்கணித்து விட்டு நாட்டுக்காகச் சேவைசெய்த தான் இரு தடவைகள் காயமடைந்தார் என்று தெரிவித்தார் சரத் பொன்சேகா. இருப்பினும் இப்போது தான் சிறையில் வாடுகிறார் என்றும் நாட்டை பிரித்துவிடும் நோக்கில் செயற்பட்டு வந்த கருணா அம்மான் அரச சுகபோகங்களை அனபவிக்கிறார் என்றும் குறிப்பிட்டார் அவர்.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment