Monday, May 23, 2011

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி இன்றுமுதல் ஆரம்பம்

Best Blogger Tips

பல்கலைக்கழகத்திற்கான கற்கை அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்றளவில் 82 சதவீதமான மாணவர்கள் பயிற்சி நெறியின் பொருட்டு மத்திய நிலையங்களுக்கு வந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் மூன்று மாதகால தலைமைத்துவ பயிற்சிநெறியில் கலந்து கொள்ள தவறிய மாணவர்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 16 ம் திகதி கலந்து கொள்ள முடியும் என உயர்கல்வியமைச்சு செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்களின் கலாச்சாரத்திற்கு எத்தகைய பங்கமும் ஏற்படாத வண்ணம் பாடநெறியை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச். எம். பௌசி, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி..திஸ்ஸாநாயக்கவிடம் முன்வைத்துள்ளார்.
இதன்படி உயர் கல்வியமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான தீர்வு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத்துவப் பயிற்சி மற்றும் உடற் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவிகள் தமது கலாச்சாரத்தை பேணும் வகையிலான உடைகளை அணிய முடியும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது..
அதேபோன்று முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழுகையில் ஈடுபட எவ்வித இடையூறுகளும் ஏற்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்காக பிரத்தியேக வசதிகள் வழங்கப்படும் எனவும் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment