Friday, June 3, 2011

காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தி மோதலில் ஈடுபட அவர்களை தூண்டியது ஜே.வி.பிதான் - கெஹெலிய

Best Blogger Tips

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மோதலின் போது, உயரதிகாரிகளின் உத்தரவின்றி காவல்துறை உத்தியோகத்தர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நிராயுத பாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிநபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூபெற்ற நீதவான் மஹானாம திலகரட்ன விசாரணைகளை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையில் காவல்துறை மா அதிபர்கள் பதவி விலகியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிக் காவல்துறை மா அதிபர் மீது கற்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒர் தற்செயலான சம்பவமாகவே கருதப்பட வேண்டும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தால் பாரியளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களிடையே ஜே.வி.பி பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தி மோதலில் ஈடுபட அவர்களை தூண்டியது  ஜே.வி.பிதான் - கெஹெலிய

ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தனியார் துறையினருக்கான ஓய்வூதிய திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அறிந்திருந்த நிலையில்,  காவற்துறையினர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தி, மோதலில் ஈடுபட அவர்களை தூண்டியது  ஜே.வி.பிதான் என்பதற்கான சாட்சியங்களுடன் தகவல்களை வெளியிட போவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாத குழுக்கள் அப்பாவி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் பின்னால், இருந்து கொண்டு காவற்துறையினர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்திய விதம் மற்றும் தாக்குதலை வழிநடத்தி விதம் தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் ஏனைய சாட்சியங்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் இருப்பதாகவும்  அவை மக்கள் முன் சமர்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தனியார் துறையினருக்கான ஓய்வூதிய திட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டதும், அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், மோதலில் ஈடுபட வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. எனினும் சிறிது நேரத்தின் பின்னர், ஆர்ப்பாட்டகார்களில் பின்னால் இருந்து காவற்துறையினர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்திய சிலர், காவற்துறையினருடான மோதலை தூண்டியுள்ளனர்.

காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல, அப்படியான மோதல்களில் இதனை விட உயிர் சேதங்களும் சொத்து சேதங்களும் ஏற்பட்டிருந்தன. எனினும் சம்பவம் நடைபெற்ற பின்னர், மோதலுக்கு பொறுப்பேற்று, காவற்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


அடிப்படைவாத குழுக்கள் இதற்கு முன்னர், பல்கலைக்கழங்களுக்குள் நுழைந்து, முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் அழித்தனர். அவர்களுக்கு தொடர்ந்தும் பல்கலைக்கழகத்திற்குள் செயற்பட முடியாததால், உழைக்கும் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தொழிற்துறையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த குழுவினரின் செயற்பாடு காரணமாக கடந்த காலங்களில் நாட்டில் இருந்த முக்கிய தொழிற்சாலைகளை நாடு இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும்  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, தனியார் துறையை அழிப்பதே அவர்களில் நோக்கம் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
 

தனியார்துறை ஓய்வூதியத் திட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது – கெஹலிய :
 02-06-2011 -13:12
உத்தேச தனியார்துறை ஓய்வூதியத்திட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதே தவிர, ஓய்வூதித் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சில நாசகார சக்திகள் இயங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பவம் காரணமாகவே காவல்துறை மா அதிபர், ஓய்வூ பெறும் கால எல்லையை நீடிக்க விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

0 comments:

Post a Comment