லிபியத் தலைவர் கடாபி கீழ்தரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பத குறித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடாபியின் கொலை படுபாதச் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பில் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
லிபிய மக்கள் தமது ஆட்சித்தலைவருக்கு எதிராக கிளர்ந்தெழுவதானால் அவர்கள் சுயமாகவே அச்செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும். அவ்வாறின்றி நேட்டோ அமைப்பினால் நன்கு திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு லிபிய மக்களை ஏவிவிட்டு கடாபியின் படுகொலை படுமோசமான முறையில் அரங்கேற்றப்பட்டிருப்பது அவ்வமைப்பின் கீழ்த்தரமான நோக்கத்தை பறைசாற்றுகிறது.
கடாபியிடம் எத்தகைய தவறுகள், குறைகள் இருந்தாலும் சட்டத்தின் முன்தோன்றுவதற்க அவருக்கு அடிப்படை மனித உரிமையின் கீழ் இடமிருந்தது. அவ்வாறின்றி கைது செய்து மிலேச்சத்தனமாக எந்த நீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது..?
நீதி விசாரணைக்கு கடாபியை உட்படுத்தாமல் கீழ்த்தரமான, கேவலமான முறையில் கடாபியை படுகொலை செய்வதற்கு மனித உரிமைகளின் காவலர்கள் என தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்கள் இந்த கேவலத்திற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
கடாபியை பொருத்தவரை அவர் இலங்கையின் உற்ற நண்பர். 1976 ஆம் ஆண:டு அணிசேரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்திருந்தார். இலங்கை நாடு தம்மை வெகுவாக கவர்ந்திருப்பதாக அவர் கூறியிருந்தார். இதிலிருந்தே கடாபியின் இலங்கை மீதான பற்றும், இலங்கையர்களுடனான அவரது பற்றும் தெளிவாகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரபுடன் கடாபி நெருங்கிய தொடர்பை பேணிவந்தார். இலங்கைக்கு பொதுவாகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் காங்கிரஸுக்காகவும் கேணல் கடாபி பல உதவிகளைச் செய்திருந்தார்.
நான் திரிபோலி சென்றிருந்த சமயம் கடாபியை சந்தித்துள்ளேன். அவருடன் கலந்துரையாடியுள்ளே;. கடாபியின் மறுமை ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்பதோடு, அவருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனபதி கிட்டவேண்டுமெனவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment