அங்கு அவர் மேலும் பேசுகையில் நான் பரீட்சை ஆணையாளராக இருக்கிறேன். எனவே பரீட்சை முறை பற்றி நான் விமர்சிப்பதை யாரும் எதிர்க்க முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.வாழ்க்கை வாழ்வதற்கே எமது பரீட்சை முடிவுகளும் சான்றிதழ்களும் எமது வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள் அல்ல. சாதாரண தரம், உயர்தரம் இவற்றில் சித்தியடையத் தவறினால் வாழ்க்கையே தவறிவிட்டதாகப் பெற்றோர்கள் நினைக்கின்றனர். அது தவறு எமது பெற்றோர்களின் காலத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம். எமது காலத்தில் அப்படியல்ல.
ஏனென்றால் சுமார் மூன்று இலட்சம் பேர் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அவர்களில் தாய் மொழி, கணிதம் சித்தியடையாதவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். எனவே அவர்களைப் பாதை ஓரத்திற்கும், போதைக்கு அடிமையாவதற்கும் நாம் தயார் பண்ணி வெளியே அனுப்புகிறோம். எது என்ன நியாயம்.? அதேபோல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 22,000 பேரை மட்டும் பல்கலைகழகம் அனுப்பிவிட்டு மிகுதிப் பேர்களை துஷ்டர்களாகவும் கயவர்களாகவும் மாற்றும் ஒரு வழிமுறைக்கு அனுப்புகிறோம்.
இந்த வகையில் நான் ஒரு பெரிய கிரிமினல் குற்றவாளியா என்று கூட நான் சிந்திப்பதுண்டு. 1972 முதல் 1978 வரை ஓரளவு எமது கல்வி முறை இருந்தாலும் 1978 இன் பின் அது மீண்டும் பிழையான பாதைக்குச் சென்றுவிட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியை வழங்கி அதை இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களாக எல்லைப்படுத்தி வெள்ளைத்தாளையும் எழுது கோலையும் யுத்தம் செய்ய வைத்து ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கொடிய முறைதான் எமது பரீட்சை முறை. ஆசிரியர் குறிப்பிட்ட ஒரு புள்ளியை மாணவனுக்கு வழங்கி சித்தியடையச் செய்யும் முறை ஒன்று வரவேண்டும். இன்று சுமார் 750 பேர் பரிசு பெற்றனர். எனது வாழ்நாளில் நான் ஒருநாளும் பரிசு பெற்றது கிடையாது.
பரீட்சைத் திணைக்களத்திற்கு வயது 60. எனது ஆயுளில் 30 வருடம் பரீட்சைத் திணைக்களத்தில் சேவை செய்துள்ளேன். பல இலட்சக்கணக்கானவர்களுக்கு நான் பரிசு வழங்கியுள்ளேன். அதாவது வாழ்க்கை வளம் பெறச் செய்ய முடியாத சான்றிதழ்களை பல இலட்சம் பேருக்கு வழங்கியுள்ளேன்.
க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரங்களில் மொத்தம் 64 பாடத்திட்டங்கள் உள்ளன. கடவுள் (சக்ரயா) உலகிற்கு வந்தாலும் தேசிய கல்வி நிறுவனம் அமைந்துள்ள பாடத்திட்டத்தைப் பூரணமாக்க முடியாது.ஆசிரியர்கள் மாணவர்கள் பின்னாலும் மாணவர்கள் ஆசிரியர் பின்னாலும் அலைகிறார்கள். காரணம் சிலபஸ் (பாடத்திட்டம்) முடிக்க வேண்டுமே அதற்காக இதை விட இன்னுமொரு கொடுமையும் உண்டு.
கண், காது மூக்கு, தொண்டை (ஈ.என்.டி.) வைத்தியர், இருதய நோய் வைத்தியர், பிரசவ வைத்தியர் பெண் நோய் மருத்துவர் தோல் வியாதி மருத்துவர் எனப் பல பிரிசு விசேட நிபுணர்கள் இருப்பது போல் பரீட்சைத் திணைக்களத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உள்ளவர்கள் ஒவ்வொரு வினாக்களை தெரிவு செய்வர்.ஒருவர் தயாரிக்கும் வினா பற்றி மற்றவருக்குத் தெரியாது. இப்படியான பல நிபுணர்களது வினாக்களுக்கு ஒரு மாணவன் ஒரே நேரத்தில் விடை எழுதவேண்டும். இது இன்னொரு கொடுமை. இருப்பினும் ஒரு பூரணமான ஆசிரியரால் இப்படியான ஒரு பரீட்சை வினாவிற்கு விடை எழுத முடியும்.
அந்தவகையில் ஆசிரியர்கள் சிரேஷ்ட மாணவர்கள், ஆசிரியர்களால் இவ் உலகையே மாற்ற முடியும்.மாணவர்களின் வாழ்க்கையுடன் பரீட்சை என்ற கருவியால் நாம் பிழையான ஒரு விளையாட்டையே விளையாடுகிறோம். எனவே பிழையான பரீட்சை முறைக்குப் பதிலாக ஆசிரியர் மதிப்பீடு/கணிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment