Friday, May 20, 2011

கட்டுநாயக்காவில் அமெரிக்க இராணுவத்தினர் ஆயுதங்களுடன் கைது

Best Blogger Tips
துப்பாக்கியுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றபோது-கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.


நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் வந்த போதே இரண்டு அமெரிக்கப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் இருந்தே விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.

இவர்களின் பைகளை ஸ்கானரில் சோதனையிட்ட போது அதற்குள் துப்பாக்கி ஒன்று பாகம் பாகமாக கழற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் பைகளில் கைத்துப்பாக்கி ஒன்றே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்-16 ரகத் துப்பாக்கியே கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க இராணுவத்தினரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிக்கவே இலங்கை வந்தாகக் கூறியுள்ளனர். விடுமுறையைக் கழிக்க வந்தவர்கள் எதற்காக துப்பாக்கியுடன் வந்தனர் என்று சந்தேகம் எழுந்துள்ளது. விமானத்தில் துப்பாக்கியை கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என்பதைத் தெரிந்தே அவர்கள் அதை பாகமாக கழற்றி மறைத்து வந்துள்ளனர். மிகவும் இறுக்கமான பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும் அமெரிக்க விமான நிலையங்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி இவர்களால் எவ்வாறு துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதன்காரணமாக உயர் அதிகாரிகள் குழுவொன்று இரு அமெரிக்கப் படையினரிடமும் கடுமையான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இவர்கள் இரகசிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் திட்டத்துடன் வந்துள்ளனரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் லஷ்கர் ஈ தைபா எனும் முஸ்லிம் போராளிகளின் நடமாட்டம் இருப்பதாக அமெரிக்கா கூறிவந்ததும் குறிப்பிடத்தக்கது. 

எனவே பின்லேடன் மீதான தாக்குதல் பாணியில் தாக்குதல் திட்டம் எதையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  எனினும், கட்டுநாயக்கவில் வைத்து இரு அமெரிக்கப் படையினர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 
News:Yarlmuslim

0 comments:

Post a Comment