Monday, May 30, 2011

'ரணவிக்கிரம ஸ்னோவி' உயிரிழந்தது

Best Blogger Tips

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கொமாண்டோப் படையினரின் வழிகாட்டியாகச் செயற்பட்ட போது, காயமடைந்திருந்த ஸ்னோவி என்ற நாய் கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளது. 4வது கொமாண்டோ படைப்பிரிவின் கோப்ரல் சம்பத் இந்த நாயை 2004ம் ஆண்டு தொடக்கம் பயிற்சி கொடுத்து பராமரித்து வந்தார். 

இராணுவத்தில் எஸ்-080 என்ற இலக்கம் வழங்கப்பட்டிருந்த இந்த நாய் வெலிஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் மறைவிடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது. 


2008 மார்ச் 15ம் நாள் கெம்பிலிஓயா காட்டுப்பகுதியில் நடந்த மோதல் ஒன்றின்போது கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உடையின் ஒரு பகுதியை இந்த நாய் எடுத்து வந்து கொண்டிருந்த போது திடீரென எதிர்த்திசையில் இருந்த மற்றொரு புலிகள் இயக்க உறுப்பினர் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் கைக்குண்டை வீசினார். 

கைக்குண்டு வெடிப்புச் சிதறல் ஒன்று ஸ்னோவியின் தலையில் பாய்ந்து படுகாயமடைந்தது. உடனடியாக அது உலங்குவானூர்தி மூலம் அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரதெனியாவில் உள்ள மிருக மருத்துவ போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

மிருக மருத்துவநிபுணர் அசோகா டங்கொல்லவிடம் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு சத்திரசிகிச்சை மேற்கொண்டு இந்த நாயைக் காப்பாற்றினர். மிகவும் மோசமான நிலையில் காயமடைந்திருந்த இந்த நாய்க்கு வேறொரு நாயின் குருதியும் ஏற்றப்பட்டது. 

இந்த நாய் போரின்போது வழங்கிய பங்களிப்புக்காக ‘ரணவிக்கிரம‘ என்ற பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல வெற்றிகளுக்கு இந்த நாய் காரணமாக இருந்ததாக கொமாண்டோப் படைப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

குறிப்பாக வேவு நடவடிக்கைளுக்காக மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை காடுகளில் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும், ஆழ ஊடுருவும் அணிகளுக்கான வழிகாட்டியாகவும் இந்த நாய் செயற்பட்டுள்ளது. 

இந்தநாயின் இழப்பு கொமாண்டோப் படைப்பிரிவின் வழிகாட்டும் குழுக்களுக்கு பேரிழப்பு என்றும் அந்தப் படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நாய் கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ றெஜிமென்ட் தலைமையகத்தில் இராணுவ மரியாதைகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் கொமாண்டோ படையினரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment