பாரத லக்ஸ்மனுடைய சேவையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறந்துவிட்டது. பலம்பொருந்திய கைகளே அவருடைய கொலைக்குக் காரணம் என கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பாரத லக்ஸ்மனின் சகோதரர்கள் இன்று தெரிவித்தனர்.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் பாரதவின் சகோதரர்களான அசோக பிரேமச்சந்திர, சுவர்ணா குணரத்ன, சுனெத்ரா அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது பாதுகாப்புத் தரப்பினர், சுதந்திரக் கட்சியினர் மீதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
அங்கு கருத்து தெரிவித்த பாரதவின் மூத்த சகோதரி சுவர்ணா குணரத்ன,
நிராயுதபாணியாகச் சென்ற எமது சகோதரனைக் கொல்வதற்கு வாகனமொன்றில் ரி 56 ரக துப்பாக்கிகள் 14 கொண்டுவரப்பட்டமை எவ்வாறு? சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் இந்தியாவுக்கு எப்படித் தப்பிச் சென்றனர். ஒரு சில மணித்தியாலங்களில் கடவுச்சீட்டு, வீசா பெற முடியுமா?
உயிருக்குப் போராடுவோரை அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிப்பது வழமை. பாரதவை ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதித்த அவர்கள் துமிந்தவை மாத்திரம் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்க வேண்டும்.
அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் பொலிஸார் அல்ல. பாதாள உலகத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள். வைத்தியசாலைக்குச் செல்வோரிடம் பலவந்தமாக அவர்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
இவ்வளவு சம்பவம் நடந்தும் ஜனாதிபதி எம்முடன் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
பாரத, கொலன்னாவையில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல்கொடுத்தார்.
போதைப்பொருள் கடத்தல், பாவனையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தார்.
இதனை விரும்பாத பலம்பொருந்திய கைகள் அவரைக் கொலை செய்வதற்கான பொறுப்பை மற்றுமொரு பலம்பொருந்திய கைகளுக்கு வழங்கின.
இது திட்டமிடப்பட்ட கொலையாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை “ என்றார்.
நீங்கள் சந்தேகப்படும் குற்றவாளி யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அசோக பிரேமச்சந்திர, “ அது உங்களால் ஊகிக்க முடியும் என நினைக்கிறேன். யாருக்குப் பலம் இருக்கிறதோ அவர்கள்தான் செய்திருக்கிறார்கள்” என்றார்.

News: Lankasri


Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment